Monday, May 24, 2010

உலகமயமாதலின் சீர் குலைவும் தேசியவாதத்தின் மீள் உருவாக்கமும்


உலகமயமாதலின் சீர் குலைவும் தேசியவாதத்தின் மீள் உருவாக்கமும்

மிக உன்னதம் என்று கருதப்படும் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் சில பத்து ஆண்டுகளிலேயே காலாவதி ஆகிவிடுகின்றன. சில கொள்கைகள் மட்டுமே அதிகபட்சம் ஐம்பது ஆண்டுகள் வரை நீடித்து நின்று, பொருளாதார மற்றும் தொழிற் நுட்ப சாத்தியங்களை நிகழ்த்தி விட்டு மறைகின்றன. அவைகளும்கூட ராணுவ ஆதிக்கத்தினாலேயே தக்க வைக்கப்பட்டன. அத்தகைய வழியில் தான் பரந்து விரிந்ததொரு தாராள பொருளாதார முறைமை முப்பது ஆண்டுகள் மட்டும் நீடித்து விட்டு 1929 ஆம் ஆண்டு காலாவதியானது. அதேப் போல் பொதுவுடைமை சித்தாந்தமும் உலகளாவிய கொள்கை யாகவும், ஒரு மததைப் போலவும், பொருளாதாரக் கொள்கையாகவும் ரஷியாவில் எழுபது ஆண்டுகளும், மத்திய ஐரோப்பியாவில் நாற்பத்தைந்து வருடங்களும் வியாபித்திரந்தது. அதுவும் ராணுவத்திற்கும் புஜ பலத்திற்குமே நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறது. அதேப் போலவே தான் *கேம்னிஜியனிச’மும் நாற்பத்தி ஐந்து வருடங்கள் மட்டுமே இருந்து விட்டு காலாவதியானது. அவ்வகை யில் உலகமயமாதல் கொள்கையும் தனது தொழிற் நுட்ப பராகிரமத்தை யும், சந்தை வழிப்பாட்டு தன்மை யையும், அறிஞர் பெருமக்களின் அறிவாற்றலையும் கொண்டு கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக கோலாட்சி செய்துவிட்டு இப் போது மரணித்து விட்டது.
பெரும் கோட்பாடுகள் ஒரே இரவில் காலாவதியாகி விடுவ தில்லை என்றாலும் அதன் பாணி கள், அதாவது உடையோ அல்லது உணவோ, அல்லது பொருளா தாரமே கூட காலாவதியாகின்றன. உலகமயமாதல் கொள்கையின் மீது கொண்டிருந்த அபரிமிதமான நம்பிக்கையினால் பலர் எழுப்பிய நம்பிக்கை கட்டிடங்கள் அனைத்தும் தகர்ந்து நொறுங்கி விழும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நன்னம்பிக்கை முனையின் ஊடாக மேற்கு இந்திய தீவையடைந் ததும், அமெரிக்காவை கண்டறிந் ததும் தான் மனித வரலாற்றின் மிக முக்கியமானது. அதன் பிறகு தான் மேற்கிந்திய தீவு மற்றும் கீழ் நாடுகளுடைனான வணிகத்தினால் பெரும் மேலை நாடுகள் பெரும் பயனடைந்தன. அதே வேளையில் அந்நிகழ்வினால் பூர்வீக குடிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின.
தனது தோற்றுவாயிலிருந்து முதலாளித்துவம் உலகளாவிய விஷயமாக கோலாட்சி செய்து வந்தது. லத்தின் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு தேசங்களைக் கண்டறிந்த ஐரோப்பியர்கள் அந்த புதிய பிரதேசங்களின் வளங்களை சுருட்டிக் கொண்டனர். லத்தீன் அமெரிக்கா, அடுத்து இந்தியா, அதன் பிறகு ஆப்பிரிக்கா என்று அவர் களது கரங்கள் நீண்டு கொண்டே போனது.
அமெரிக்காவில் கண்டெறியப் பட்ட தங்கம் மற்றும் வெள்ளிச் சுரங்கங்களும், அதற்காக நடைபெற்ற கருப்பர்கள் வணிகமும் தான் புதிய அடிமைமுறைக்கு தொடக்கமாக அமைந்தது. ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளின் சுரண்டல் களமாக மாறியது. முதலாளித்துவ சிந்தனைப் போக்கை கொண்டு தான் உலகம் முழுவதை யும் இங்கிலாந்து வளைத்து போட் டது. இந்தியாவுக்கும் வந்தார்கள். கிழக்கு இந்திய கம்பெனிக்காக ராபர்ட் கிளேவ் 1757 ஆம் ஆண்டு படையெடுத்து வந்த வரலாறும், வாகை சூடியதும் தான் பிரிட்டி ஷாரின் இந்திய வரலாறு அல்ல. பிரிட்டிஷாரின் முதல் தொழிற் சாலை சூரத்தில் 1600 யின் தொடக் கத்திலேயே அவர்களின் சேவை தொடங்கி விட்டது. அவர்களுக்கு இடைத்தரகர்களாக இருந்தவர்கள் தான் குஜராத்திய பனியாக்கள். இவ்வாறாக தளகர்த்தாவாக இருந்த பிரிட்டிஷாரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு ஒருவன் வந்தான் திடீ ரென்று, அவன் தான் அமெரிக்கன். பிரிட்டிஷாரைப் போல் அல்லாமல் நாடு பிடிக்கும் முறைமையை அமெ ரிக்கா வேறு விதமாக கையாண்டது. இரண்டாம் உலக யுத்தம் வரை உலகப் பெரும்சக்தியாக திகழாத அமெரிக்கா, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு பிரிட்டிஷ் மற்றும் ஃபிரஞ்ச் நாடுகளை பின்தள்ளி முன்னுக்கு வந்தது. தனது ராணுவ பலத்தை மட்டுமே முதலீடாகக் கொண்டு அமெரிக்கா உலகப் பொருளாதாரத்தை தன் பிடிக்குள் வைத்திருந்தது. அதற்காகவே தனது ராணுவத்திற்கு மொத்த செலவில் பாதியை செலவும் செய்து வருகிறது. இந்த கட்டுரை, அமெரிக்காவைப் பற்றி விரிவானதொரு பார்வை ஏªன்ன்று வாசிப்பவர்களுக்கு தோன்றக் கூடும். இந்தியாவின் தற்போதைய பொருளாதாரக் கொள் கையானது பெருமுதலாளித்துவ அமெரிக்க சார்பு கொள்கை. இரண்டாம் உலகப் போரில் ஐரோப்பிய நாடுகள் பெருத்த அழிவை சந்தித்த வேளையில், அந்தப் போரினால் பெருத்த லாபமடைந்தது அமெரிக்கா தான். பேர்ல் துறைமுக சேதம் மட்டுமே அமெரிக்காவிற்கு ஏற்பட்டது. அதனால், தான் தயாரித்து வைத்திருந்த அணு குண்டை ஜப்பான் மீது வீசி தனது ஆதிக்கத்தை ஐரோப்பிய நேச நாடுகளிடம் நிலைநாட்டிக் கொண்டது.
அந்த தாக்குதலினால் சக்தி வாய்ந்த ஜப்பானை சீர்குலையச் செய்தது அமெரிக்காவிற்கு லாபமாக அமைந்தது. தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக ஐரோப்பா நாடுகளில் நடந்து வந்த சண்டை, நேரிட்ட பேரிழப்புகள். ஆதிக்க மனப்பான்மையாலும், நாடு பிடிக்கும் ஆசையாலும் நேர்ந்த இழப்புகள் கூடவே இரண்டாம் உலக யுத்தம் ஏற்படுத்திய பெரும் சேதம் ஐரோப்பாவிற்குள்ளாகவே நடந்து முடிந்து விட்டது. குறிப்பாக எடுத்துக் கொண்டால், பதினேழாம் நூற்றாண்டில் ஜெர்மனியில் ஏற்பட்ட போரில் அந்நாட்டில் மட்டும் 40 விழுக்காடு மக்கள் மடிந்தனர். அப்படியென்றால் எத்தகைய அளவு பொருட் சேதம் ஏற்பட்டிருக்கும் என்பதை ஊகித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட 75 விழுக்காட்டுக்கு பொருளாதார இழப்போ அல்லது அதற்கு மேலாகவோ ஏற்பட்டிருக்கக் கூடும். அதே போல் பெல்ஜியம் போன்ற சிறிய நாடுகளில் கூட கோடிக் கணக்கான மக்கள் மடிந்தனர். அப்போது உலகத்தையே ஆட்சிபுரிந்த இங்கிலாந்து தனது அனைத்து கண்டுபிடிப்புகளையும் நாடுகளைப் பிடிப்பதிலேயே செலவிட்டது.
இதற்கிடையே உலகமெங்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அழித்தொழிப்பு அமெரிக்காவிற்கு அனுகூலத்தைத் தந்தது. யூதர்களின் வணிகத் தொடர்பும், அறிவு சொத்தும் அமெரிக்காவுக்கு பயன் விளையச் செய்தது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நிலையில் அமெரிக்காவின் உளவு நிறுவனமான சி ஐ ஏ இத்தாலி நாட்டில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அங்கு ஜனநாயகம் என்ற போர்வையில் தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப் பட்டன. அதன் விளைவால் அடிமைத்தனமும், வேலை நேரமும் கூடுதலானது. அதனால் அமெரிக்க நிறுவனங்களும், அதன் சார்பு மையங்களும் பெருத்த லாப மடைந்தன. இப்படியான சூழ்நிலை யில் தொடக்கம் முதலே முதலாளித் துவ முறைமை, அரசியல் மற்றும் பொருளாதாரத்துடன் பின்னிப் பிணைந்ததாக அமைந்திருந்தது.
எண்பதுகளின் இறுதிவரை உலகத்தில் ஏற்பட்ட முக்கியமான மாற்றங்கள் சர்வதேச உறவுகளுக் கான கோட்பாட்டை பாதித்து வந்தன. பரவலாக பின்பற்றி வந்து கொண்டிருந்த ஒழுக்க நெறிகள், எதார்த்த வாதம், சுதந்திரத்திற்கான வேட்கை, மார்க்ஸியம் போன்ற விஷயங்கள் உலகம் முழுவதும் சமூக தளத்தில் முக்கியமாக இயங்கி கொண்டிருந்தன. இத்தகைய சூழலில் எழுபதுகளில் உலகம் முழுவதும் கலாச்சாரப் பண்பாடு புதிய திசையில் பயணிக்க எத்தனிக்கையில் பிராந்திய பொருளாதார அரசியலில் வெற்றிடம் நிலவியது. இருபத்தைந்து ஆண்டு கால சமூக சீர்திருத்தப் பணியாற்றிய மேற்கத்திய தலைவர் களால் அத்தகைய பணியை மேலும் கொண்டுசெலுத்த இயலாமல் திக்குத்திசையற்று போயினர். அப் போது தான் உலகமயமாதல் வலுவாக நிலைபெற்றது.
சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோ’வில் 1971 ஆம் ஆண்டு ஐரோப்பியாவில் உள்ள பெரும் வணிக குழுமங்களின் தலைவர்கள் ஒன்றுகூடி நாகரிகத்தை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு வணிகத் தினூடாக எடுத்து செல்வது என்பது குறித்து ஆழ்ந்த ஆலோசனையில் ஈடுப்பட்டார்கள். அதையடுத்து உலகில் உள்ள அனைத்து குழு மங்களின் தலைவர்களும், அரசு மற்றும் அரசியல் கர்த்தாக்களும் கூடி விட்டனர். பிறகு அறிஞர் பெரு மக்களும் வெள்ளம் போல் அவர் களோடு கூடினர். இனி முதலீடுகளை எப்படி பெருக்குவது, எவ்வாறு பொதுத் துறைகளை பின்னுக்குத் தள்ளுவது, எவ்வாறு போட்டி போடுவது என்று ஒவ்வொருவரும் தங்களது தங்கள் அறிவுக் குதிரையை சொடுக்கி விட்டார்கள்.
அந்த டாவோ கூட்டம் புயல் போல் வெகுண்டழுந்து ஜி-6 மற்றும் ஜி-8 அமைப்புகளை 1975 ஆம் ஆண்டில் உருவாக்கியது. அது தான் உலகில் உள்ள பணக்கார நாடுகள் முதல் முறை ஒன்றுகூடி, சமூகத்தின் பாதகங்களை எண்ணாமல் ஒருமித்த முடிவெடுத்த தருணம். அவர்கள் மேற்கொள்ள முனையும் செயல்கள் சமூகத்தில் எத்தகைய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்று சற்றும் யோசிக்காமல் வணிக நலம் ஒன்றே அவசியம் என்று முடி வெடுத்தனர். முதலாவதாக ஜி-6 கூட்டத்தை ஃபிரான்ஸ் தொடங்கியது. அந்நாட்டின் ராம்போலைட் என்ற இடத்தில் நடந்த முதல் உச்சி மாநாட்டில் அங்கத்தினர்களாக ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆகிய பணக்கார நாடுகள் கலந்துகொண்டன. உலக பொருளாதாரத்திற்கேற்ப ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஆராய்தல்
ஜனநாயக நாடுகளுக்கான அரசியல் மற்றும் பொருளாதார பொறுப்பு
சர்வதேச நாடுகளுக்கிடையே யான ஒத்துழைப்புக்கு வழிகோலுதல்.
பண வீக்கம் மற்றும் எரிசக்தி பிரச்னைகள்
வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பொருளாதார மேம்பாடு.
உலக வர்த்தக வளர்ச்சியை ஊக்குவித்தல்.
சீரான நிதிநிலையை ஏற் படுத்துதல்
வர்த்தகம் தொடர்பான பன் நோக்கு பேச்சுவார்த்தை
ரஷியா மற்றும் கீழை பிரதேசங்களுடனான பொருளாதார உறவு
வளரும் நாடுகளை புரிந் துணர்ந்து, அதன் அடிப் படையி லான ஒருங்கிணைந்த கூட்டுறவு
சர்வதேச பொருளாதார ஒத் துழைப்பிற்கான மாநாடு
சர்வதேச அமைப்புகளின் ஊடாக ஒத்துழைப்பு
ஆகிய விஷயங்கள் குறித்து அம்மாநாட்டில் விவாதிக்கப் பட்டன. அரசியல் மற்றும் பொரு ளாதார ரீதியாக விவாதிக்கப்பட்ட இவ்விஷயங்கள் மிகவும் முற்போக் கானதாக தோற்றமளித்தாலும் இம்மாநாட்டின் நோக்கம் அதுவல்ல. நேர்த்தியாகவும் நூதனமாகவும் முன் வைக்கப்பட்டத் திட்டங்கள் திட்டங் களனைத்தும் பின்னாட்களில் எவ்வித எதிர் கருத்துக்கும் இடமன்றி உலகப் பெரு முதலாளித்துவம் முன்றாம் உலக நாடுகளின் மீது திணித்தது. அது எவ்வாறு எளிதில் சாத்தியமானது?
- தொடரும் -

Sunday, May 23, 2010

கிம் கி- டுக்’கின் படங்களில் விபச்சாரம் என்ற வன்மம்


இழிந்தவன்:
கிம் கி- டுக்’கின் படங்களில் விபச்சாரம் என்ற வன்மம்


சியோல் நகர மத்திய பகுதியில் உள்ள பூங்காவில் தன்னந்தனியாக கல்லூரி மாணவியான சூன்-ஹா அமர்ந்திருக்கிறாள். அங்குள்ள இருக்கையில் அமர்ந்து தனது தோழனுக்காக காத்துக்கொண்டிருக் கிறாள். அப்போது அங்கு வரும் காமத் தரகன் ஹான்-ஜி, அவளை உற்று நோக்கிக்கொண்டிருக்கிறான். இளம்பெண்களை விபச்சார விடுதிக்கு கொண்டு சேர்ப்பதே அவனது தொழில். அவள் மீது மைய்யல் கொள்ளும் அவன், அவளருகே போய் அமர்கிறான். அவளேயே வெறித்துப் பார்க்கிறான். அதையடுத்து அவள் அங்கிருந்து நகர்ந்து எதிரில் உள்ள இருக்கையில் போய் அமர்கிறாள். அங்கேயும் போய் அமர்கிறான் அவன், அதற்குள்ளாக அவளது நண்பன் வருகிறான். அவனை நோக்கி எழுந்து போகிறாள். அவனது சில்மிஷங்கள் குறித்து தனது நண்பனிடம் முறையிடுகிறாள். அதையடுத்து மெல்ல விலகிச் செல்கிறான் அந்த காமத் தரகன், சிறிது தூரம் சென்றதும், மீண்டும் அவளை நோக்கி வந்து வாயில் அழுத்தமாக முத்தமிடு கிறான். அனைவரும் அவனை அடித்து அவளிடமிருந்து விலக்கி விடுகிறார்கள். அவளிடம் மன்னிப்பு கோரும் படி காவலர்கள் மிரட்டு கிறார்கள். அந்த காமத் தரகன் மறுத்து விடுகிறான். அங்கிருந்து வந்து அவனது முகத்தில் காரி உமிழ்கிறாள்.
தனது அறைக்கு செல்லும் ஹான்-ஜி அங்குள்ள கண்ணாடி ஜன்னல்களை உடைத்து தனது ஆத்திரத்தை தீர்த்துகொள்கிறான். பிறகு ஒரு நாள் சூன்-ஹா ஒரு பல்பொருள் அங்காடிக்கு செல் கிறாள். அங்கு எகோன் ஷெய்லி’யின் ஓவியங்கள் அடங்கிய புத்தகத்தைக் காண்கிறாள். அதில் இருக்கும் ஒரு ஓவியத்தைக் கிழித்து தன் வசமாக்கிக் கொள்கிறாள். இதனிடையே அவளருகே இருந்த ஒருவன் பணப் பையினை விட்டுச் செல்கிறான். அவளை சிக்க வைப்பதற்காகவே அந்த காமத்தரகக் கும்பலைச் சேர்ந்த ஹான்-ஜி’யின் சகா யாங்-டவ் அதை அங்கு விட்டு செல்கிறான். அந்த பணப்பையை எடுத்துகொண்டு கழிவறைக்கு ஓடும் அவள், அதில் உள்ள பணத்தை எடுத்து விட்டு பணப்பையை கழிவறைத் தொட்டியில் போடுகிறாள். கடையை விட்டு அவள் செல்லும் போது கடைக்காரனால் துரத்தி பிடிக்கப்படுகிறாள். அந்த பணப் பையில் இருந்த 10000 டாலரை திருடி விட்டதாக கூறும் அவன், பணத்தைத் தரும்படி அடித்துத் துன்புறுத்துகிறான். அதில் 2,500 டாலர் மட்டுமே இருந்ததாகக் கூறுகிறாள். கடன் வாங்கியாவது தன்னுடைய பணத்தைக் கொடுக்கும் படி மிரட்டுகிறான். இறுதியாக அவளையே ஈடாகக் கொண்டு 10000 டாலர் பெற்று செல்கிறான். இப் போது கடன் கொடுத்தவன் அவளை அச்சுறுத்துகிறான். உன்னிடம் ஈடாக கொள்ள ஏதுமில்லை. ஆகையால் உனது உடம்பையும், அழகையும் ஈடாக கொண்டே நான் கடன் அளிக்கிறேன் என்கிறான். அதற்கான கடன் பத்திரத்திலும் கை ரேகையையும், கையெழுத்தையும் பெறுகிறான்.
அதையடுத்து விபச்சார விடுதிகள் அமைந்திருக்கும் பகுதி காட்டப் படுகிறது. அனைத்து விபச்சார விடுதிகளிலிருந்தும் விலை மாதர்கள் ஆண்களை கூவி அழைத்து கொண்டிருக்கிறார்கள். சிலர் கைகளைப் பிடித்து இழுக்கிறார்கள். அந்த வீதியில் ஹான்-ஜியும் அவனது நண்பர்களும் காரில் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போது ஹான்-ஜி’யின் நண்பன் “எல்லாம் நாம் திட்ட மிட்டப்படி சரியாக நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் அவளால் 15000 டாலர் பணம் எப்படி திரும்ப செலுத்த முடியும்? ஆகையால் இன்னும் இரண்டு நாட்களில் இங்கு வந்து விடுவாள்,” என்கிறான்.
கடன் கொடுத்தவன் சூன்-ஹாவை காரில் அழைத்து வருகிறான். கடன் பத்திரத்தில் உள்ள அம்சங்களை படித்துக் காட்டி. அவளை பலாத் காரம் செய்கிறான். அவளை கண்காணித்துக் கொண்டிருக்கும் காமத் தரகர்கள். அவனை அடித்து விட்டு, மீட்டுச் செல்கின்றனர். அவளை அழைத்துகொண்டு நேராக விபச்சார விடுதிக்கு வருகிறார்கள். சூன்-ஹா’வை விபச்சார விடுதியின் தலைவியிடம் ஒப்படைக்கிறார்கள். தான் வாங்கிய கடனை அடைக்கும் வரை அவள் அந்த விபச்சார விடுதியில் இருக்க வேண்டிய நிலை.
“நீ அழகாக இருக்கிறாய். உனது பெயர் என்ன,” என்று கேட்கிறாள் அந்த விபச்சார விடுதியின் தலைவி.
அதற்கு மௌனம் சாதிக்கிறாள் சூன்-ஹா.
“உனக்குப் பெயரில்லையா?” என்கிறாள்
“உன்னிடம் எனது பெயர் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,” என்கிறாள் சூன்-ஹா.
கன்னத்தில் ஓங்கி அறை விடுகிறாள்.
“இப்போது சொல், உனது பெயர் என்ன?”
“சூன்-ஹா,” என்கிறாள்
வேகமாக சொல் என்று அதட்டுகிறாள். மீண்டும் சப்தமாக தனது பெயரை கூறுகிறாள். பிறகு வயதைக் கேட்கிறாள். இருபத்தி ஒன்று என்று பதிலளிக்கிறாள் சூன்-ஹா. விபச்சார விடுதியின் தலைவி சற்று புன்னகைத்து விட்டு, “எந்த வித தொந்தரவும் செய்யாமல் நீ சமாளித்துக் கொள்வாயா?” என்கிறாள். சூன்-ஹா மௌனம் சாதிக்கிறாள். பிறகு அவளை அழைத்துகொண்டு போய் உடைகள் வாங்கித் தருகிறாள்.
மீண்டும் விபச்சார விடுதிகள் அமைந்திருக்கும் வீதியெங்கும் விலைமாதர்கள் நின்று தங்களது வணிகத்திற்கு ஆட்களைப் பிடித்துகொண்டிருக்கிறார்கள். சூன்-ஹா’வும் விபச்சார விடுதியின் முகப்பில் ஒரு காட்சிப் பொம்மையை போல் அமர்ந்திருக்கிறாள். ஏனையவர்கள் ஆட்களை மும்முரமாக பிடித்துகொண்டிருக்கும் வேளையில் இவள் மட்டும் ஒரு பதுமை போல் அமர்ந்திருக்கிறாள். இறுதியாக ஒருவன் அவளிடம் அணுகி, அறைக்கு அழைத்துப் போகிறான். அவளையே கண்காணித்து கொண்டிருக்கும் ஹான்-ஜி, பின் தொடர்ந்து சென்று என்ன நடக்கிறது என்று ஒரு துளை வழியே கண்காணிக்கிறான். அவளை வலுகட்டாயமாக பலவந்தப் படுத்தும் அவன், அவளது ஆடைகளை கலைகிறான். அவள் தடுக்கிறாள். உடனே ஹான்-ஜி, தனது சக காமத்தரகனை செல்பேசியில் அழைக்கிறான். அவன் அந்த அறைக்கு வந்து, “இவள் இன்னும் பழக்கப்பட வில்லை. வேறு பெண்ணை அனுப்பி வைக்கிறேன்,” என்கிறான்.
“இல்லை, எனக்கு இவளை தான் பிடித்திருக்கிறது,”என்கிறான்.
“உனது கண்களை நான் பிடுங்கி எறியும் முன் இங்கிருந்து நீ போய் விடு,” என்கிறான். அவன் அங்கிருந்து எழுந்து ஓடுகிறான்.
“வாடிக்கையாளரை இவ்வாறு நடத்த யார் கூறினார்கள்,” என்று அவனைக் கடிந்துகொள்கிறாள் விடுதி தலைவி.
“மேடம், எனக்கு நீங்கள் ஓர் உதவி செய்ய முடியுமா? எனக்கு ஒரு தோழன் இருக்கிறான். அவனை நான் மிகவும் விரும்புகிறேன். அவனோடு நான் முதலில் உறவு கொள்ளவே விரும்புகிறேன்,” என்கிறாள் சூன்-ஹா.
ஹான்-ஜி’யும் அவனது நண்பர் களும் அவளை அவனிடம் அழைத்து செல்கிறார்கள். அவளும், அவளது தோழனும் காரில் இருக்கிறார்கள். ஹான்- ஜி’யின் மற்ற இரு நண்பர் களும் சற்று தொலைவில் அமர்ந்து கண்காணித்துகொண்டிருக்கிறார்கள்.
“உனக்கு என்ன ஆயிற்று, இந்த காரில் நாம் சந்திப்பதற்கான நோக்கம் என்ன,” என்கிறான் அவளது தோழன்.
“என்னிடம் எதுவும் கேட்காதே, என்னை அணைத்துக்கொள்.” என்ற வாறு கூறி அவனை அணைத்துக் கொள்கிறாள்.
“சற்று பொறு, ஏன் இவ்வாறு திடீரென இவ்வாறு நடந்துகொள் கிறாய்? என்ன நடக்கிறது,” என்கிறான்.
அதற்குள்ளாக ஹான்-ஜி தனது சகாக்களைப் பார்த்து ஜாடை செய் கிறான். அவர்கள் எழுந்துசென்று அவளது தோழனை காரில் இருந்து இழுத்து கீழே தள்ளுகிறார்கள். மீண்டும் அவள் விபச்சார விடுதிக்கே அழைத்து வரப்படுகிறாள்.
விபச்சார விடுதியின் நடவடிக் கைகளில் பழகி விடுகிறாள். இதனிடையே ஹான்- ஜி’யின் சகாவான மியாங்-சூ அவளை அடைய விருப்பம் கொள்கிறான். அவ்வேளையில் வணிக வளாகத்தில் சூன்-ஹா ஆசைப்பட்ட எகோன் ஷெய்லி’யின் ஓவியப்புத்தகத்தை ஹான்-ஜி கொண்டு போய் கொடுக்கிறான். அந்தப் புத்தகத்தைப் புரட்டி பார்க்கிறாள். அந்தப் புத்தகத்தில் ஒரு பக்கம் கிழிக்கப்பட்டிருக்கிறது. தான் கிழித்து வந்த அந்த ஒற்றைப் பக்கத்தை எடுத்து வந்து அதில் பொருத்திப் பார்க்கிறாள். சரியாக பொருந்துகிறது.
அத்தருணத்தில் ஹான்-ஜி’யின் நண்பன் அவளிடம் வந்து உறவு கொள்கிறான். “கல்லூரி மாணவியி டம் உறவு கொள்ள வேண்டும் என்பது எனது ரொம்ப கால ஆசை, உனது இந்நிலைக்கு நானும் ஒரு காரணமாக இருந்து விட்டேன். மனிதன் என்றுமே அநியாயமாக நடந்துகொள்ள கூடாது. உன்னைக் காணும் போதெல்லாம் குற்ற உணர்வை அடைகிறேன்,” என்கிறான் மியாங்-சூ
“நீ என்ன சொல்கிறாய்?” என்கிறாள் சூன்-ஹா.
“ஒரு மாதத்திற்கு முன் நீ ஒருவனை கன்னத்தில் அறைந்து முகத்தில் உமிழ்ந்தாய் அல்லவா. சரி. அதைப் பற்றி பேச கூடாது. அதெல்லாம் முடிந்த கதை,” என்று கூறி கீழே கிடந்த எகோன் ஷெய்லி ஓவிய புத்தகத்தை எடுத்து “அழகான ஓவியங்கள்” என்று கூறி சென்று விடுகிறான்.
சூன்-ஹா அந்தப் புத்தகத்தை எடுத்து பார்க்கிறாள். இதற்கெல் லாம் காரணம் ஹான்-ஜி என்றதும் வேகமாக அவன் இருப்பிடத்திற்கு படியேறி செல்கிறாள். அவனை கடுமையாக தாக்கி ஏசுகிறாள். பிறகு அங்கிருந்து வந்து தனது அறையில் இருக்கும் துணிமணிகளை எடுத்து பெட்டியில் வைக்கிறாள். அப் போது அங்கு வரும் விபச்சார விடுதி தலைவி, “என்ன செய்து கொண்டி ருக்கிறாய்,” என்கிறாள்.
“இது போல் நான் இந்த இடத்தில் இருக்க விரும்ப வில்லை,” என்கிறாள் சூன்-ஜி.
“நான் கூறுவதை கேள்,” என்கிறாள்
“எதற்கு? நீ யார் ? என்கிறாள் சூன்-ஜி.
“எதற்காக ஒரு பெண்ணை மற் றொரு பெண்ணான நீ கொடுமைப் படுத்துகிறாய்,” என்று கூறி அழுகிறாள் சூன்-ஜி.
உடனே தனது மேலாடையை அவிழ்த்து “என்னை போல் நீயும் பொது குளியல் அறைக்கு செல்ல முடியாமல் இருக்கப் போகிறாயா,” என்கிறாள் தலைவி.
சூன்-ஹா அதிர்ச்சியடைகிறாள். பிறகு தலைவி அவளுக்கு மது ஊற்றி தருகிறாள். வெகுவாக குடித்து விட்டு படுக்கையில் சாய்கிறாள். அப்போது ஹான்- ஜி வருகிறான். அவளோடு உறவு கொள்ள முனைகிறான். நிதானமில்லாமல் இருக்கும் அவள், அவன் மீது வாந்தி எடுத்து விடுகிறாள். அதனைத் துடைத்து விட்டு சுய நினைவற்று இருக்கும் அவளை உறவு கொள்கிறான்.
அதன் பிறகு அவள் முழு ஈடுபாட்டுடன் விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள். வடிக்கையாளர்கள் பலர் அவளையே தேர்ந்தெடுப்பதால் மற்ற விலை மாதர்களுக்கு ஆத்திரம் வருகிறது. அவளைத் தாக்குகிறார்கள் அப்பெண்கள். ஒருத்தி சிகரெட்டால் சூடு வைத்து விடுவதாக மிரட்டு கிறாள்.
ஒரு நாள் ஹான்-ஜி’யின் சகா மியாங்-சூ, தான் சூன் -ஹா’விடம் பேச வேண்டும் என்றும், அவளை மிகவும் விரும்புவதாகவும், அவளோடு வெளியில் செல்ல விரும்புவதாகவும், சந்தர்ப்பம் கூடினால் திருமணம் செய்ய விரும்பு வதாகவும், அவளை ஒரு கேவலமான விபச்சாரியாக இனி விடப் போவதில்லை என ஹான்-ஜி’யிடமே கூறுகிறான். அதன் பிறகு விடுதி செல்லும் அவன், அவளை அழைத்துக் கொண்டு மாடிக்குப் போகிறான்.
“உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கியதற்கான பொறுப்பை நானே ஏற்கிறேன்,” என்கிறான் மியாங்-சூ.
“என்ன பேசுகிறாய்,” என்கிறாள் சூன்-ஹா.
“குற்ற உணர்வால் இதை நான் கூற வில்லை. உண்மையில் நான் உன்னை விரும்புகிறேன்,” என்கிறான்.
“புத்தி கெட்டவனே, வெளியே போ,” என்கிறாள்.
“என்னை நீ நம்பவில்லை? உன்னை உண்மையாகவே விரும்பு கிறேன்,” என்கிறான்.
“நீ கூறுவதை நான் கேட்க விரும்ப வில்லை,” என்று கூறி விட்டு எழுகிறாள்.
“சூன்-ஹா, போகாதே, என்னை நீ பைத்தியமாக ஆக்குகிறாய்,” என்றவாறு கட்டியணைக்கிறான்.
“என்னை உண்மையாகவே விரும்புகிறாயா?” என்கிறாள்
“ஆம்,” என்கிறான்.
“அப்படியென்றால் என்னை நீ இங்கிருந்து விடுவிக்க வேண்டும், என்னை நீ உண்மையாகவே விரும் புவதேன்றால் உன்னால் என்னை விடுவிக்க முடியும்” என்கிறாள்.
“அப்படி நான் உன்னை விடுவித்தால், நீ சென்று விடுவாய், பிறகு உன்னை நான் காண வாய்ப்பிருக்கதே.” என்கிறான்.
“அப்படி நான் சென்று விட்டா லும் உன்னை நிச்சயம் காண்பேன் என்று சத்தியம் செய்கிறேன்,” என்கிறாள்.
சூன்-ஹா தப்பிப்பதற்கு உதவி செய்கிறான். அறையின் ஜன்னல் வழியாக தப்பித்து விடுகிறாள். தப்பித்துச் சென்றவளை மீட்டு கடற்கரைக்கு கொண்டு செல்கிறான். அங்கு ஒரு பெண் தற்கொலை செய்து கொள்ள கடலுக்குள் செல்கிறாள். அவள் அமர்ந்த இடத் தில் ஒரு ஜோடியின் புகைப்படம் இருந்தது. அந்த புகைப்பட்டத்தில் உள்ள ஜோடியின் முகங்கள் கிழிக்கப்பட்டிருந்தன. ஆண் மற்றும் பெண்ணின் முகம் கிழிக்கப் பட்டிருந்தது. மறுபடியும் பிடித்து கொண்டு வருகிறான் ஹான்-ஜி.
இதனிடையே ஹான்-ஜி’யின் எதிராளி டல்-சூ சிறைச்சாலை யிலிருந்து விடுதலையாகப் போவதாக அவனது சகாக்கள் கூறுகிறார்கள். ஒரு நாள் டல்-சூ விபச்சார விடுதிக்கு வருகிறான். சூன்-ஹா’வை அழைத்து கொண்டு அறைக்குப் படியேறுகிறான். அப்போது மற்றொருத்தி தான் வருவதாக கூறுகிறாள். “நீ நீண்ட நாட்களாக இங்கிருக்கிறாய்,” என்று கூறி விடுகிறான். டல்-சூ, சூன்-ஜி’வுடன் இருக்கும் போது ஹான்-ஜி’யின் சகா உள்ள நுழைகிறான். இருவருக்கும் இடையே மோதல் ஏற்படவே ஹான்-ஜி’க்கும் டல்-சூ’க்கும் இடையே கைகலப்பு முற்றுகிறது. இதனிடையே டல்-சூ’வின் கூட்டாளி ஒருவன் கல்லி னால் ஹான்-ஜி’யின் தலையை தாக்கி விடுகிறான். ஹான்-ஜி ரத்தம் வழிய தரையில் சாய்கிறான். கீழே விழுந்தவன். காகிதத்தை கூர் செய்து அவன் தொண்டை குழியில் குத்தி விடுகிறான்.
அதையடுத்து ஒரு நாள் டல்-ஜி’யின் ஆள் ஒருவனால் கூர் கண்ணாடி கொண்டு குத்தப்படு கிறான் ஹான்-ஜி. அவன் குணமாகி வருகிறான். அதே வேளையில் அவனது சகா டல்-ஜி’யை கொன்று விடுகிறான். குற்றத்தை தான் ஏற்றுகொண்டு சிறை செல்கிறான் ஹான்-ஜி. அவனது நினைவாகவே சூன்-ஹா உழன்று கொண்டிருக் கிறாள். தொழிலில் ஈடுபட மறுக்கிறாள்.
“ஏன் இப்படி நடந்து கொள் கிறாய், உன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய அவனைப் பற்றி எண்ணி நீ இவ்வாறு செய்வது நல்லதல்ல. நீ ஏதாவது அவனிடம் சொல்ல விரும்புகிறாயா?” என்கிறாள் விபச்சார விடுதி தலைவி.
ஹான்-ஜி’யின் சகா யாங்- டவ், அவளை சிறைச்சாலைக்கு அழைத்து செல்கிறான். “நீ வெளியே வா, இப்படியே இருந்து சாகப் போகிறாயா,” என்று கூக்குர லிடுகிறாள். பிறகு அவளை அங் கிருந்து அழைத்து வரும் வழியில் அவளை விடுவிக்க எண்ணுகிறான் ஹான்-ஜி’யின் சகா. அவள் மறுத்து விடுவது மட்டுமல்லாமல் அவனது கன்னத்தில் அறைந்து விடுகிறாள். மீண்டும் விடுதிக்கே வருகிறாள்.
இதனிடையே வழக்கமாக விபச்சார விடுதிக்கு வரும் போலீஸ் அதிகாரி ஒருவனை யாங் டவ் கடுமையாக தாக்குகிறான். அவனும் சிறையில் அடைக்கப்படுகிறான். ஹான்-ஜி’யை தூக்கிலிட அழைத்துச் செல்கிறார்கள். அப்போது அவனது நண்பன் யாங் டவ், அவனோடு தங்கியிருக்கும் ஏனைய கைதிகளை தாக்குகிறான். அப்போது ஹான்-ஜி’யை அழைத்து சென்றுகொண் டிருந்த போலீசார் ஓடி வந்து அவனது அறையை திறந்து உள்ளே செல்கிறார்கள். போலீசாரையும் தாக்கி விட்டு வெளியே ஓடி வருகிறான். பிறகு ஹான்-ஜி’யை தாக்குகிறான். அவனது இத்தகைய செயல் ஹான்-ஜி’யை தப்பிக்க வைக்கும் முயற்சியே, அவன் திட்டமிட்டு சிறைச்சாலை வந்ததும் அதற்குத்தான். தப்பித்தும் விடுகிறான்
கரையில் கண்டெடுக்கப்பட்ட புகைப்படத்தை கண்ணாடியில் ஒட்டி வைத்திருந்தாள். அதனூடாக அக்கண்ணாடியின் முலமாக அவள் கண்காணிக்கப்பட்டதை அறிகிறாள். இதனிடையே விபச்சார விடுதிக்கு திரும்பும் ஹான்-ஜி, சூன்-ஹா’வை அழைத்து கொண்டு போய் பூங்கா வில் விட்டு வருகிறான். அதையடுத்து அவனுக்கும், அவனது சகாவான யாங்-சூ மோதல் ஏற்படுகிறது. தான் சூன்-ஹா’வை காதலிக்கும் பட்சத்தில் எப்படி அவளை நீ கொண்டு போய் விடலாம் என்று ஆபாசமாக திட்டுகிறான். இருவருக்கும் இடையே சண்டை முற்றுகிறது. யாங்-சூ’வை கடுமையாக தாக்கி விடுகிறான் ஹான்-ஜி. சிறிய கத்தி ஒன்றினால் ஹான்-ஜி’யை குத்தி விடுகிறான். ரத்த வெள்ளத்தில் ஹான்-ஜி சாய்கிறான்.
சூன்-ஹா அலைந்து கொண்டிருக் கிறாள். அவளுக்கு இப்போதும் இருக்கும் ஒரே வாய்ப்பு அவளது உடல், சாலைகளில் நகரும் வானக ஓட்டிகள் தான் அவளது வாடிக்கை யாளர்கள். வானகங்களின் நிறுத்த«ம் அவளது இளைப்பாறல். ஒரு நாள் கடற்கரைக்கு வருகிறாள். கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட பெண் அமர்ந்திருந்த இடத்தில் கண்டெடுத்த முகம் கிழிக்கபட்ட ஜோடியின் புகைப் படத்தோடு தன் பையில் இருக்கும் ஹான்-ஜி மற்றும் அவளது புகைப்படங்களை ஒட்ட வைத்து பார்க்கிறாள். பிறகு அந்த படத்தில் உள்ளவாறே அதே மாதிரியாக வண்ண உடையை வாங்கி அணி கிறாள். ஹான்-ஜி’யும் அதே உடை போன்ற உடையை அணிந்து கடற்கரைக்கு வந்து அந்த இடத்தில் அமர்கிறான். அவளும் வருகிறாள். அவன் அருகே அமர்கிறாள். இரு வரும் கட்டியணைத்து கொள் கிறார்கள். பிறகு ஒரு டிரக்’கில் படுக்கையை கிடத்தி அங்குள்ள மீனவர்களிடம் அவளை மீண்டும் விபச்சாரத் தொழிலுக்கு உட்படுத்து கிறான்.
“இழிந்தவன்,” படத்தில் மட்டு மல்லாது கிம் கி- டுக்’கின் படங்கள் அனைத்துலும் பெண் மீதான் வன்மம், பாலுணர்ச்சியின் ஊடாக விவரிக்கப்படுகிறது. பாலி யல் புனிதம் மெல்ல மெல்ல தகர்க்கப்படுகிறன. முதலில் தனக்கு முத்தம் கொடுத்தவனுடம் அறைந்தும், துப்பியும் எதிர்ப்பை தெரிவிக்கும் சூன்-ஹா. பிறகு தனது தோழனிடமே முதல் உறவு கொண்டு தனது கற்பை அவனுக்கே அளித்து புனிதப் படுத்திகொள்ள எண்ணும் போதும், பிறகு கட்டாயத்தின் பேரில் விபச்சாரத்தில் ஈடுபடும் அவள் பிறிதொரு கட்டத்தில் அதில் ஈடுபாட்டுடன் ஈடுபடும் போதும் பெண்ணின் உடல் ஆலிங்கனத் திற்கான குறியீடாக காட்டப்படுவது மட்டுமல்லாமல் பெரும்பாலும் அப்பிரதிகள் விளிம்பு நிலையை கொண்டிருக்கின்றன. விபச்சார விடுதியின் வன்மம் அதன் மொழி யிலிருந்து முதலில் அடையாளப் படுத்தப்படுகிறது. கொச்சையான தொரு மொழி சர்வசதாரணமாக புழங்கப்படுகிறது. போலீஸ்காரன், “என்ன எனக்கு பணத்திற்குப் பதிலாக பெண்களை கொடுத்தே சரிகட்டி விடுலாமென்று நினைக்கிறாயா,” என்கிறான். படம் முழுவதும் விடுதிக்குள்ளே நகர்கிறது. அவரது மற்றொரு படமான “samaritan girl,”ல் விபச்சாரத்தில் ஈடுபடும் இரு மாணவிகளை பற்றியது. ஒருத்தி விபச்சாரத்தில் ஈடுபடுகிறாள். அதற்கு தூண்டுதலாக இருப்பது “வசுமிதா”, தான். இன்று முதல் வசுமிதா’வாக ஆக போகிறேன் என்கிறாள் ஜூவா-யங். பெயர் அழகாக இருக்கிறது, “யார் அந்த வசுமிதா? என்கிறாள் அவளது தோழி யோ-ஜின். இந்தியாவில் முன்பொரு காலத்தில் வாழ்ந்து வந்த ஒரு விபச்சாரி என்று பதிலளிக்கும் அவள், “அவளுடன் உறவு கொண்ட அனைவரும் புத்த மத்ததின் மீது மிகுந்த பற்றுடை யவர்களாக ஆகிவிட்டார்களாம்.” என்கிறாள் ஜூவா-யங்.
“அது எப்படி முடியும்,” என்கிறாள் யோ-ஜின்.
“அவள் விபச்சாரி என்பதால் பாலியலால் தான் முடியும்,” என்கிறாள். “இன்று முதல் தான் வசுமிதா’வா ஆக போகிறேன், ஆகையால் என்னை அவ்வாறே அழைக்க வேண்டும்,” என்கிறாள் மேலும். அவ்வாறாக ஐரோப்பா செல்வதற்கு பணம் சேர்த்து கொண்டிருக்கிறார்கள் இருவரும், ஆனால் பாலியலில் யோ-ஜின் ஈடுபடுவதில்லை. போலீசார் ஒரு நாள் அவள் இருக்கும் ஹோட்ட லுக்குள் ஆய்வினை மேற்கொள்ள வருகையில் ஜன்னல் வழியாக குதித்து விடுகிறாள். தனது உயிர் போகும் தரு வாயில் தன்னோடு உறவு கொண்ட ஒருவனை காண விரும்புகிறாள். அவனை தேடி ஓடுகிறாள் தோழி. தன்னுடன் உறவு கொண்டால் தான் அவளை காண வருவதாக அவன் கூறி விடுகிறான். அவனுடன் உறவு கொண்ட பின் இருவரும் வந்து பார்க்கும் போது அதற்குள்ளாகவே ஜூவா-யங் இறந்து விடுகிறாள்.
அதுமுதற் கொண்டு யோ-ஜின், ஜூவா-யங்’கை போல் மாறி விடுகிறாள். அவளது டைரியின் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களை கொண்டு ஆண்களை அழைக்கிறாள். ஜூவா-ஜின் உறவு கொண்ட ஆண்களோடு இவளும் உறவு கொண்டு அவர்களிடம் அவள் பெற்ற பணத்தை யோ-ஜின் திருப்பி கொடுக்கிறாள்.
அதே போல் அவரது மற்றொரு படமான “Brigade Inn”. விபச் சாரத்தை தொழிலாக கொண்டி ருக்கும் கணவன் மனைவியர். ஏற்கனவே விபச்சார தொழிலுக் கென்று கொண்டு இருந்த பெண் ணுக்கு பதிலாக இன்னொருத்தி வருகிறார். திரைப்படத்தின் தொடக் கத்திலேயே எகோன் ஷெய்லி’யின் ஓவியத்தை கையில் தூக்கிக் கொண்டு ஓரு பெண் வருகிறாள். அவளது பெயர் ஜின்-அ. எதிர்திரையில் தள்ளாடி யவாறு ஓரு பெண் கையில் வண்ண மீன் கொண்ட பிளாஸ்டிக் பையுடன் வருகிறாள். சோர்ந்து போய் வரும் அவள் மீது ஜின்-அ மோதி விடுகிறாள். அவள் கையில் இருந்த வண்ண மீன் தரையில் விழுகிறது. உடனே தன் கையில் உள்ள தண்ணீரை கொண்டு அவளது பிளாஸ்டிக் பையில் ஊற்றி கீழே கிடந்த மீனை எடுத்து அந்த பையில் போடுகிறாள்.
அந்த வீட்டிற்கு வரும் அவள், அந்த குடும்பத்தினர் அனைவராலும் துன்பப்படுத்தப்படுகிறாள். அவளை வைத்து விபச்சாரம் செய்யும் கணவன் மனைவியர் தங்கும் வசதியுடன் கூடிய உணவகம் வைத்திருக்கின்றனர். அதில் வைத்து ஜின்-அவிபச்சாரம் செய்யப்படுகிறாள். உணவகம் நடத்துபவர் மற்றும் அவரது மகன் என்று பலரும் அவளுடன் உறவு கொள்கிறார்கள். அதுவும் இன்றி அவரது மகள் மற்றும் மனைவி யாலும் கொடுமைப்படுத்துகிறார்கள்.
கிம் கி டுக்’கின் ஆண் பாத்தி ரங்கள் அனைத்தும் ‘இழிந்தவர் களாக,’ அமைக்கப்பட்டிருக்கும் வேளையில் ‘Bad Guy’ யிலும் அத்தகைய குணம் கொண்ட பாத்திரங்களே வலம் வருகின்றன. விபச்சார விடுதியில் சூன்-ஹா’ வை கொண்டு வந்து சேர்க்க ஹான்-ஜி மற்றும் அவனது நண்பர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் விபச்சாரம் எத்தகைய வலைப் பின் னலுடன் கூடிய பயங்கரம் என்பதை தான் கிம் கி டுக்கின் திரைமொழி எடுத்து காட்டுகிறது. அவரது படங் களில் வரும் ஆண் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் பெண் மீதான பாலியல் நோக்குடைய இழிந்தவர் களாகவே உள்ளனர்.

Saturday, May 22, 2010


இதழின் உள்ளடக்கம்

ஹாவர்ட் ஸிண்: மக்களின் வரலாறு 4
பணிவான இளவரசி 7
ஸ்கேர்மெண்டாவின் பயணங்கள் 9
ஃபெத்திக் அக்கின்- இருவேறு தேசங்களிலிருந்து... 16
உலகமயமும் இந்திய விவசாயமும் 25
பெலா குட்டி: இரவுப்பாடகன் 28
அறச்சலூர் இசைக் கல்வெட்டு 32
எதுவுமே அறியாமல் எல்லாமுமான கவிஞன் 35
ஜெயந்தன்: கனவாகிப்போன நித்யம் 37
ஆளுமைகள்-அறிமுகங்கள் (ஆன்டன் செக்காவ்) 39
குறும்பட விமர்சனம் 42
இழிந்தவன்: கிம் கி- டுக்’கின் படங்களில் விபச்சாரம் என்ற வன்மம் 45
தமிழ் சினிமா: திரைமொழியும் அதன் வீழ்ச்சியும் 56
உலகமயமாதலின் சீர் குலைவும்
தேசியவாதத்தின் மீள் உருவாக்கமும் 59
குழந்தைமை 62
போர்ஹேஸ் நேர்காணல் 65
மணல்புத்தகம்



தொடர்புக்கு:

க.செண்பகநாதன்,
24\17, சி.பி.டபுல்யூ. குடியிருப்பு
கே.கே. நகர்,
சென்னை. 600 078

செல்: 9894931312 93

மந்திரச்சிமிழ் (காலாண்டிதழ்)

அன்பார்ந்த வாசகர்களுக்கு முதலில் எனது மன்னிப்பைக் கோரிக்கொள்கிறேன். இதழ் வெகுவாக காலதாமதமாகிவிட்டது. கடந்த இதழில் குறிப்பிட்டது போல் ஏற்பட்ட வறட்சி சூழ்நிலை மற்றும் போர்ஹேஸ் சிறப்பிதழ் தயாரிப்பதில் எற்பட்ட கால தாமதம் காரணமாக இந்நிலை ஏற்பட்டு விட்டது. முதல் இதழுக்கு வாசகர்கள் தந்த ஓரளவு ஆதரவையும் பெருமிதமாகக் கொண்டு இதழை முனைப்பாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன். எனினும் சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் மனரீதியாக எதிர்மறை உற்சாகத்தை அளித்து பேருதவி புரிந்தனர். இன்றையச்சூழலில் ஒரு சிற்றிதழ் நடத்துவது என்பது எத்தகைய சங்கடங்களை ஏற்படுத்தும் என்று அறியாதவன் அல்ல நான். சென்ற இதழுக்கு தன்முனைப்புடன் சில விளம்பர உதவிகளை தந்த நண்பர்களும் இதழின் போக்கைக் கண்டு அன்புடன் வாபஸ் பெற்றுகொண்டனர். இருப்பினும் அதுவே நமது முதல் வெற்றி. கார்ப்ரேட்களைக் காட்டிலும் அதன் அடிவருடிகள் மிக சிரத்தையுடன் தங்கள் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இவைகளைக் கூட தாங்கிக் கொள்ளலாம். பன்றிக்காய்ச்சல்தான் பெரும் தொல்லையாக இருக்கிறது. அது உயிரை மெய்யாகவே பாதிக்கிறது. தமிழில் சிறுபத்திரிக்கைக்கான வெற்றிடத்தை உணர்ந்துதான் இதழை நடத்த முனைந்து செயலாற்றி வருகிறோம். வாசகர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கும்படி சென்ற இதழிலிலேயே குறிப்பிட்டிருந்தேன். அதேபோல் இதழின் அரசியலுக்கேற்ப படைப்பாக்கங்களை கோரியிருந்தேன். எந்தவிதப் பயனும் இல்லை. சுற்றுச்சூழல் குறித்து தீவிரமாக பேசப்பட்டு வரும் இந்நாட்களில் நாம் ஏன் காகிதத்தை வீணடிக்க வேண்டும் என்ற எண்ணமும் கூட ஏற்பட்டது. இருப்பினும் சில நிறுவனங்களின் புத்தக வெளியீட்டிற்கு, பெரும் அரசியல் தனவான்களும், திரைப்பட மேதமைகளும் திரண்டு வந்து மேடையேறி ஆதரவளித்ததைக் கண்டு நாங்களும் உற்சாகம் அடைந்து மனதை மாற்றிகொண்டு இதழை நடத்த ஆர்வத்துடனும், குதூகலத்துடனும் இறங்கினோம். பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவளித்து காகிதங்களை வீணடிப்பதைக் காட்டிலும் சொற்பமாக சில ஆயிரங்கள் மட்டும் செலவழிப்பதால் எந்தத் தீங்கும் நேர்ந்து விடாது.
இவ்விதழ் இரட்டை இதழாக மலர்ந்துள்ளது. சென்ற இதழின் தொடர்ச்சியாக இரண்டு ஃபிரெஞ்ச் மொழி சிறுகதைகளின் மொழியாக்கங்களும், புதிய பகுதியாக குறும்படப் பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.
இனி அடுத்த இதழில் புத்தக விமர்சனப்பகுதியும் புதிதாக சேர்க்க எண்ணியுள்ளோம். புத்தகங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ் இலக்கியச் சூழலில் போர்ஹேஸ் வெகுவாக பேசப்பட்டு விட்டார். இனி என்ன உள்ளது என்று வாசிப்போர் கேட்கக்கூடும். போர்ஹேஸ் குறித்து முழுமையாக இதுவரை தமிழில் பேசப்பட வில்லை என்பதே எனது வாதம். அவரைப் பற்றி வெளிவந்துள்ள விஷயங்கள் அனைத்தும் வெறும் ஆரம்ப அரிச்சுவடிகளே. அவரைப்பற்றிய விரிவான வாசிப்பின் தொடக்கமே எங்களது பணி.
அடுத்த இதழ் வரும் போது தமிழ் இலக்கியம் சுபிக்ஷம் பெற்றுவிடும், நமது தானைத் தலைவர் நடத்தும் செம்மொழி மாநாட்டினால் அப்பயன் கிட்டி விடும். இனி 1 ரூபாய் அரிசி போலவும், இலவச வண்ணத் தொலைக்காட்சி போலவும் தமிழும் மலிவு பெறும்...
-
பதிப்பாசிரியர்